கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்கு உட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், பழமை மாறமால் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இரணியல் பகுதியில் அமைந்து உள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பில் பழைமை மாறமால் புதுப்பித்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இரணியல் அரண்மனையில் பழுதுபட்ட மின் இணைப்புகளை மாற்றி புதிய மின் இணைப்பு வேலைகள், பழுது பார்த்தல், பராமரிப்பு வேலைகள், சுவர் பழுதுபட்டு உள்ளதனை மாற்றி திரும்ப கட்டுதல் பணி, மர சீலிங் வேலைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
இரணியல் அரண்மனை ஆய்வு
