
கன்னியாகுமரி மாவட்டம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இன்று முதல் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 22,461 மாணவ மாணவிகள் 85 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறன் மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுவதற்காக தரைதளத்தில் தேர்வுஅறைகள் அமைக்கப்பட்டு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாபுடன் 22 வழித்தடங்கள் வழியாக 85 தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டது. விடைத்தாள்கள் 3 மையங்களில் சேகரிக்கப்பட்டு கலக்கி பிரித்து மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுகள் அனைத்தும் முடிந்தவுடன் மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு அனுப்பிவைக்கப்படும். இந்த தேர்வுக்காக உயர் அதிகாரிகள் தலைமையில் 8 குழுக்கள் ஒழுங்கீன செயல்களை தடுக்கும் விதமாக பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
அனைத்து 85 தேர்வு மையங்களிலும் 150 நிற்கும்படை நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அனைத்து தேர்வு மையங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மின்சாரத்துறை மூலம் சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவதுறை மூலம் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு முதலுதவி வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.
இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழித்தேர்வில் 167 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதவில்லை.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.