24.5.2025 அன்று நடைபெற உள்ள மெகா வேலைவாய்ப்பு முகாம் 100 சதவீதம் வெற்றிபெற முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து, மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்களில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மூன்று மாதத்திற்கு மேலாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு பணிகள் மேற்கொண்டு தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அதாவது நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் , தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
அதனடிப்படையில் இப்போது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆனது தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நான்கு இடங்களில் தான் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி உள்ளனர். நமது மாவட்டத்தில் குறைவான தொழில் நிறுவனங்கள் உள்ளதால் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக நாம் இந்த முகாம் நடத்துவதன் வாயிலாக நமது மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர்கள் வெளி மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு உருவாகும். கல்லூரி படிப்பு படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக முன்னணி நிறுவனங்களில் பணியில் சேர்வார்கள். இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 6500 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் அனைத்தும் சென்னை சுற்றி உள்ள பகுதிகள், கோவை ஒரகடம், கிருஷ்ணகிரி, ஓசூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன.
குறிப்பாக 2023, 2024, 2025-ம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள், இளங்கலை பொறியியல் (பி.இ) இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்), ஐ.டி.ஐ, தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள், ஆசிரியர்படிப்பு படித்தவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொழில்நுட்ப கல்லூரி, பொறியியல், ஐ.டி.ஐ மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள். படித்து முடித்த மாணவர்களில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள் பெற்று உள்ள மாணவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. 18 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறும் அனைவரும் அந்த நிறுவனத்தின் நிரந்தர பணியாளர்கள் ஆவார்கள்.
இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயனுள்ளதாக அமைத்திடும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்துநிலையங்கள், கல்லூரிகள், ஆலயங்கள், கடலோர பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடையே வேலைவாய்ப்பு முகாம் குறித்து வாகன பிரச்சாரம், விளம்பர பதாகைகள், உள்ளுர் தொலைக்காட்சிகள், வானொலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பேருந்துகளில் கியூர் கோடு ஒட்டி விளம்பர செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முகாமில் கலந்து கொள்ளபவர்களுக்கு வடசேரி மற்றும் அண்ணா பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. முகாமிற்கு கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு நேர்காணல் நடைபெறும் பகுதிகள் குறித்த வழிகாட்டி பதாகைகள் வைப்பதன் மூலம் காலவிரயம் தவிர்க்கப்படும். நடைபெற உள்ள முகாமானது 24.5.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
மேலும் https://bit.ly/kkmjf2025 என்ற இணையத்தளத்தின் வாயிலாக முன்பதிவு செய்யதவர்களும், முன்பதிவு செய்யமால் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்பவர்கள் காலை 8:30 மணிக்கு நாகர்கோவில் பொன்ஜெஸ்லி கல்லூரியில் அன்றைய தினம் அமைக்கப்பட்டு உள்ள பதிவு மையத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு 7200722996, 9385614058, 8667511342 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் நமது மாவட்டம் மட்டுமல்லாது தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்களின் வாயிலாக நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமினை 100 சதவீதம் பொதுமக்களுக்கு சென்றடைய ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கூட்டத்தில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிறைட், உசூர் மேலாளர் (நிதியியல்) சுப்பிரமணியம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் ராகுல், உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 24 ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம்
