கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடநூல் வண்ண சீருடைகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்

Share others

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் வண்ண சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இன்று (2.6.2025) நடைபெற்றது. கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா பாடநூல் மற்றும் வண்ண சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், விலையில்லா பாடநூல் மற்றும் வண்ண சீருடைகளை வழங்கியும் பேசுகையில் –
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசின்கீழ் பள்ளிக்கல்வித்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களின் சிறந்த பயிற்சியின் காரணமாக கடந்த கல்வியாண்டை விட மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் இந்த கல்வியாண்டில் அதிகரித்து உள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசானது அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் கல்வி கற்க தேவையான அனைத்து வசதிகளையும் தேவைக்கேற்ப உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி மாணவர்கள் மிகச்சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். அரசு பள்ளியில் நாம் படிப்பது என்பதே நமக்கு ஒரு பெருமையான விஷயமாகும்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் நமது மாவட்டம் உள்ளது. இதற்கு கடுமையாக உழைத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேரும்போது உங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டமான மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டமும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நீங்கள் நன்றாக படித்தால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு வாய்ப்புக்கிடைத்தால் உங்களுடைய கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம் அனைத்தையும் அரசே கொடுக்கும். மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேர்ந்து வாழ்வில் உயரிய நிலையை அடைய வேண்டுமென்ற குறிக்கோளை கொண்டிருக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் தினம் தோறும் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும். மேலும் ஆசிரியர்களால் தினந்தோறும் நடத்தப்படும் பாடங்களை அன்றே படித்து நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். இவ்வாறு நல்ல மதிப்பெண்கள் பெரும்பட்சத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளை எளிதில் பெறலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 52668 குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளதால் நான் பெருமையடைகின்றேன். அதில் இன்று முதல்கட்டமாக முதல் மற்றும் இரண்டாம் இணை சீருடைகளுக்கான மொத்த சீருடைகள் 238662 தைக்கப்பட்டு மாணாக்கர்களுக்கு வழங்க கல்வி சரகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது இணை சீருடைகளுக்கான மொத்த சீருடைகள் 238662. இச்சீருடைகள் தைத்து மாணக்கர்களுக்கு வழங்க தையற்பணிகள் மகளீர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கம் மூலம் நடைபெற்று வருகிறது. இவைகள் முழுமையாக தைத்து முடித்து எதிர்வரும் 31.8.2025 க்குள் மாணக்கர்களுக்கு வழங்க முறையே சம்பந்தப்பட்ட கல்வி சரகங்களுக்கு ஒப்படைக்கப்படும் எனத்தெரிவித்துக்கொள்கிறேன். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுவரும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாணவ, மாணவியர்களிடையே பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயமீனா, கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இக்னேஷியஸ் ஆல்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட தொழிற்கூட்டுறவு அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *