கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகள்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா டோக்கன் விநியோகிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு தகவல்.

கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலை கடைக்கு உட்பட்ட பகுதி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகள்தோறும் வழங்கி வருவதை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்-

தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.3000 சேர்த்து வழங்கப்படும் என ஆணை வெளியிட்டு உள்ளார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், இதர கூட்டுறவின் கீழ் செயல்படும் 46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழுவால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டு உள்ள 5,79,667 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 406 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் சேர்த்து 580073 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து நியாய விலைக்கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு முடிக்கப்பட்டு உள்ளது. கரும்பு கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களைக் கொண்டு மாவட்ட ஆட்சியாளரால் வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் அண்டை மாவட்டமான மதுரையில் கரும்பு விளைவிக்கப்படும் இடங்களுக்கு சென்று விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 8.1.2026 முதல் வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது குடும்ப அட்டைதாரர்களின் வீடுகள்தோறும் நேரிடையாக சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாக மேலகிருஷ்ணன்புதூர் பகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதற்கு கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகள் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மேலகிருஷ்ணன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலை கடைக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்டு வருவதையும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று குடிமைப்பொருட்களுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
