காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 13 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு திருப்பலி முன்னோருக்காகவும், ஆலயத்திற்கு நிலம் தானம் வழங்கியவர்களுக்காகவும் நடந்தது. 7.30 மணிக்கு புனித ஞானப்பிரகாசியார் ஏழை குடில் திட்ட வீடு திறப்பு விழா நடந்தது. மாலை 4 மணிக்கு கொடிப் பவனி, 6 மணிக்கு செபமாலை, 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், 7 மணிக்கு திருப்பலி அருட்பணி விக்டர் தலைமையில் நடந்தது. இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்கல், இறை கீதங்கள், காரங்காடு இசைக் கலைஞர்கள் குழு பாடல் போட்டியும் நடந்தது. விழா நாட்களில் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு, செபமாலை, திருப்பலி நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 7.30 மணிக்கு திருப்பலி, 9.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, மதியம் 3 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 9 ம் நாள் விழாவான 21 ம் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலியும், 10:30 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர், இரவு 10 மணிக்கு பாதுகாவலரின் சிறப்பு தேர்ப்பவனி, நாதஸ்வர இசையும் நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு திருவிழா திருப்பலி, 10 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி, மாலை 5.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், 7 மணிக்கு புனித அந்தோணியார் வரலாற்று நாடகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, பங்குத்தந்தை அருட்பணி சுஜின், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜெய்சன், செயலாளர் மேரி ரெக்செலின், துணை செயலாளர் ஜோஸ்பின் ஷீபா, பொருளாளர் சேவியர் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.
காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
