
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் முன்னிலையில் தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்பில் 79,000 ஏக்கர் பயன்பெறும் நிலங்களின் பாசனத்திற்காக 1.6.2025 முதல் 28.2.2026 வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் தேவைக்கேற்ப மற்றும் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, சிற்றார்-I மற்றும் சிற்றார்-II அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டு உள்ளார்.
அதனடிப்படையில் தோவாளை வட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், கல்குளம் வட்டம், கிள்ளியூர் வட்டம், திருவட்டார் வட்டம், விளவங்கோடு வட்டம் மற்றும் அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதில் 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நெல் சாகுபடி, 15 ஆயிரம் ஏக்கர் வாழை சாகுபடி, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தென்னை சாகுடியாக உள்ளது. தோவாளை கால்வாயில் 12868 ஏக்கர் நிலமும், பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயில் 19711 ஏக்கர் நிலமும், அனந்தனார் கால்வாயில் 10457 ஏக்கர் நிலமும் உள்ளது. மேலும் கோதனார் இடதுகரை கால்வாய், நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய், திற்பரப்பு இடதுகரை கால்வாய், திற்பரப்பு வலதுகரை கால்வாய், பழையாறு கால்வாய், அருவிக்கரை இடதுகரை கால்வாய், அருவிக்கரை வலதுகரை கால்வாய் ஆகிய கால்வாய்களும் உள்ளது. கோதையாறு கால்வாயில் 64 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பட்டணங்கால்வாயில் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இன்றைய தினம் நீர் திறக்கப்படுவதால் பயன்பெறும் குளங்கள் மற்றும் நேரடி பாசனம் பெரும் விவசாயிகள் பயனடைவதோடு ஒரு உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தியை அதிகப்படுகிறது. ஏக்கரில் பெறப்படும் மகசூல் அதாவது உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தி அதிகப்படுத்தப்படுகிறது.
பேச்சிப்பாறை அணையின் மொத்த கொள்ளளவு 48 அடி ஆகும். தற்போதயை நீர்மட்டம் 43.62 அடியாகவும், நீர் வரத்து 1036 கன அடியாகவும் உள்ளதால் உபரி நீர் இன்று வெளியேற்றப்படுகிறது. கோதையாறு மற்றும் பட்டணங்கால் ஆயக்கட்டு விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விவசாயம் ஜென்கின் பிரபாகர், உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, உதவி பொறியாளர் பொன் செல்வ குமார், பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய பிரதிநிதிகள் தாணுபிள்ளை, முருகேசன்பிள்ளை, அருள், விஜி, தேவதாஸ், பெரியநாடார், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.