
இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து தெரிவித்து, அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, முன்னாள் படைவீரர் நலத்துறை மற்றும் கன்னியாகுமரி ஜவான்ஸ் நலசங்கம் இணைந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பிற்கு வந்தடைந்தது.
இந்த பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வரவேற்று, பேசுகையில்-
தேசப்பற்றுடன் சமூகப் கடமையாற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விடுமுறையில் இருக்கும் ராணுவ வீரர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களுடன் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் வந்து, கடைசியாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.
பேரணியின் போது எனது வாக்கு விற்பனைக்கல்ல மற்றும் அனைவரும் வாக்களிப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்து, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பேரணியில் கலந்துகொண்ட ராணுவ வீரர்கள் வரும் வழிகளில் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் ராணுவ வீரர்களின் பங்களிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முதல் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், முதியோர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, முன்னாள் ராணுவ வீர ர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
