சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கையில்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில்
பொதுமக்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மற்றும்
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் நடைபெற்ற
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் பொற்கொடி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026ஐ முன்னிட்டு, பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மற்றும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் பொற்கொடி தொடங்கி வைத்து தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல்-23 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்கினை பதிவு செய்திடும் பொருட்டும், இளம் வாக்காளர்களை ஊக்குவித்திடும் வகையிலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து, சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், வாக்காளர் உறுதிமொழி ஏற்பு, இளம் வாக்காளர்களை ஊக்குவித்திடும் வகையில் கவுரவித்தல், நெறிசார் வாக்களிப்பு செல்பி புகைப்படம் எடுத்தல், மல்லி விதைகளால் ஏற்படுத்தப்பட்ட கை விரல், தேர்தல் விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்வுகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூனும் பறக்க விடப்பட்டது.
இந்த நிகழ்வுகளில், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியானது, தொடங்கி வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து, மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. பொதுமக்களாகிய நாம் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்படும் பொருட்டு, இவ்வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வாக்காளர்களாகிய நாம் ஒவ்வொரு வரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, ஏப்ரல் 23 ஆம் தேதியன்று நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் சிவகங்கை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களித்து,
தங்களது வாக்குரிமையை நிலைநாட்டிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் பொற்கொடி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயகுமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்யா மற்றும் கல்லூரி மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
