![](https://kumarikural.in/wp-content/uploads/2025/02/IMG-20250207-WA0035-1000x443.jpg)
நடப்பு கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 12ம் வகுப்பு பயிலும் 19,387 மாணவ மாணவியர்கள் செயல்முறை தேர்வு எழுதுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு நடைபெறும் செயல்முறை தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இன்று (7.2.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்முறை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 189 தேர்வு மையங்களில் செயல்முறை தேர்வு நடைபெறுகிறது. 19,387 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இன்று தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் செய்முறை தேர்வு மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
![](https://kumarikural.in/wp-content/uploads/2025/02/IMG-20250207-WA0033-1000x438.jpg)
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் பற்றி கேட்டறியப்பட்டது. பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவர்கள் பல்வேறுபட்ட சூழ்நிலையில் இருந்து வருகை புரிவதால் மாணவர்களின் கற்றலில் பெற்றோரை விட ஆசிரியர்களே அதிக அக்கறை காட்ட வேண்டும் என ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து வறுமையான சூழலில் இருந்தும், உடைக்கப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்தும், அக்கறை இல்லாத சில பெற்றோரிடம் இருந்தும், கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத நிலையில் இருந்தும், படிப்பின் முக்கியத்துவம் தெரியாத சூழ்நிலையில் இருந்தும் பள்ளிக்கு மாணவர்கள் வருகை புரிவதால், அவர்களது சூழலை கருத்தில் கொண்டு, உரிய முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்து, மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிட ஆசிரியர்கள் தூண்டுகோலாய் அமைந்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. எந்தவொரு சூழ்நிலைகளையும் காரணம் காட்டி மாணவர்களின் கற்றல் அடைவில் எந்த பின்னடைவும் இருத்தல் கூடாது எனவும், இத்தகைய சவாலான சூழ்நிலையில் ஆசிரியர்கள் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு அனைத்து மாணவர்களையும் 100 சதவீத தேர்ச்சி பெற செய்வது ஆசிரியர்களின் தலைமையாய கடமையாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
ஆய்வில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.