மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலையில் பொதுத்தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவிதங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களிடம் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசுகையில்-
பொதுத்தேர்வுக்கு இன்னும் குறைவான காலமே இருப்பதால் தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு படிக்க வேண்டும். பொதுத்தேர்வு மீதான அச்சம், கலக்கமும் இருக்கும். நீங்கள் அனைவரும் பொதுத்தேர்வுக்கு சிறப்பாக தயாராகி வருகிறீர்கள். பொதுத்தேர்வு என்பது உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் காலகட்டம் என்பதால் மிகுந்த அக்கறையுடன் படிக்க வேண்டும். மேலும் நம் பள்ளிக்கும் 100 சதவீத தேர்ச்சியை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த ஆண்டு நம்முடைய பள்ளிகள் குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்று உள்ளது. எனவே மாணவர்களாகிய நீங்கள் முழு தேர்ச்சி பெறுவதற்கு இடையூறாக காணப்படும் காரணிகள் ஏதாவது உள்ளனவா என மாணவர்களிடம் கேட்டறியப்பட்டது. மாணவர்கள் கணிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க கூறினார்கள். கணிதத்திற்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுகள் அடிக்கடி வைத்து மாணவர்களை தயார்படுத்தும்மாறு கணித ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கு வருகை தருவதற்கு முன்னதாக இரண்டு மணி நேரமாவது இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை படிக்க வேண்டும்.
பொதுத்தேர்வுக்கு குறுகியகால அளவே இருப்பதால் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி அளித்து, மாணவர்களின் கற்றலில் ஏற்படும் குறைபாட்டினை களையும் வண்ணம் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் எனவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை அதிகரிக்க வேண்டும். எனவே மாணவ மாணவியர்களாகிய நீங்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலையில் பொதுத்தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பள்ளிகல்வி) சாரதா, மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், கலந்து கொண்டார்கள்.