அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி தவணைத்தொகையை
டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த தவணை மற்றும் அதிக பிரீமியத்துடன் ஆயுள் காப்பீடு பாலிசி மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பல்வேறு சூழல் காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளர்கள் தங்கள் தவணைத் தொகையை அஞ்சலகம் சென்று செலுத்த தவறி விடுவதால் அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன. காலாவதியான பாலிசிகளை அபராத தொகையுடன் தான் புதுப்பிக்க இயலும்.
எனவே பின்வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசிகளை தொடர்ந்து எளிதாக செலுத்தி கொள்ளலாம்.
ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டல், https://pli.indiapost.gov.in என்ற வலை முகவரி மூலம் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை பதிவு செய்து பிஎல்ஐ/ஆர்பிஎல்ஐ டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யலாம்.
ஐபிபிபி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், இதில் பிஎல்ஐ/ஆர்பிஎல்ஐ பிரீமியத்துடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஐபிபிபி பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.
என்ஏசிஹெச் வசதி மூலம் பரிவர்த்தனைகள், இதில் வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கில் இருந்து 7, 12 அல்லது 17 ஆம் தேதிகளில் நேரடியாக டிஜிட்டல் முறையில் பிஎல்ஐ/ஆர்பிஎல்ஐ பிரீமியத்தை செலுத்த முடியும்.
•தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு மூலம் பரிவர்த்தனைகள், இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் பிஓஎஸ்பி கணக்கில் இருந்துபிஎல்ஐ/ஆர்பிஎல்ஐ பிரீமியத்தை செலுத்த நிலையான அறிவுறுத்தல் வழங்கலாம். வாடிக்கையாளர்கள் பிஓஎஸ்பி இன்டர்நெட் வங்கி மற்றும் மொபைல் வங்கி வசதிகளை பயன்படுத்தியும் தங்கள் பிரீமியத்தைச் செலுத்தலாம்.
இவ்வாறு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.