
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் மூன்று நாட்கள் நடைபெறும் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்து உள்ள குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில், மூன்று நாட்கள் நடைபெறும் சாலை பாதுகாப்பு ஓவியக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (10.2.2026) துவங்கியது.
இந்த நிகழ்ச்சி, மாணவர்கள் இடையே போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஓவிய கண்காட்சி
இந்த கண்காட்சியில், மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும்.
துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவு
காவல் துறையின் மோப்ப நாய் படை பிரிவு செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்படும்.
ஆயுதங்கள் தொடர்பான கண்காட்சி விளக்கம்
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பான காட்சி விளக்கங்கள், மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.
சாலையில் உள்ள சிக்னல் போர்டு குறித்து போக்குவரத்து காவல் அலுவலர்களின் விளக்க உரைகள்
பாதுகாப்பு குறித்த காவல் துறை அலுவலர்களின் விளக்க உரைகள் மற்றும் காணொளி விளக்கங்களும் இடம்பெற உள்ளன.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்காக வினாடி-வினா போட்டிகள் நடத்தப்படுவதுடன், சாலை பாதுகாப்பு கழக மாணவர்கள் சிறப்பு பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டு, தங்களது விழிப்புணர்வு செயல்பாடுகளை வெளிப்படுத்த உள்ளனர். மேலும், சாலை பாதுகாப்பு குறித்து தயாரிக்கப்பட்ட ரீல்ஸ் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சியின் மூலம், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தி, விபத்துகளை குறைக்கும் நோக்கில் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துவக்க நாள் நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜு , உதவி காவல் கண்காணிப்பாளர் பயிற்சி அங்கிதா, துணை காவல் கண்காணிப்பாளர் பயிற்சி இளஞ்செழியன், போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
