
கோதையாறு வடிநில கோட்ட நீர் மேலாண்மை கூட்டம் செயற்பொறியாளர் அருள்சன் பிரைட் தலைமையில் நடந்தது. பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், உதவி செயற்பொறியாளர்கள் மில்கி சதேக், வினிஸ்டன் லாறன்ஸ், தாணுமுர்த்தி, பேரூராட்சி அலுவலர்கள், தலைவர்கள், தாணு பிள்ளை, முருகேச பிள்ளை, அருள், செண்பகசேகர பிள்ளை, அருளானந்த ஜார்ஜ், இளங்கோ, தேவதாஸ், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குளங்கள் தூர்வாரி வண்டல் மண் எடுக்கும் பணியை விரைவுபடுத்தி வரும் மாவட்ட ஆட்சியாளர், காவல் கண்காணிப்பாளர், நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் உட்பட அதிகாரிகளுக்கும், குளங்களை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் பாசனத் துறை தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தலைவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த வருட நீர்வளத்துறை பராமரிப்பு நிதி சுமார் 5 கோடி ரூபாயில் முக்கிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தவும், தூர் வாரும் பணிகளை மே மாதம் இறுதிக்குள் முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை சார்பான பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி மன்றங்கள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று பணிகள் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.