
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 580 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியை சார்ந்த ராஜாமணி என்பவரின் மகன் கிருஷ்ணராஜ் என்பவர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 7.1.2025 அன்று உயிரிழந்தார். அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சேக்அப்துல் காதர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) பாலாஜி, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.