மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஊழியர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 1ஆம்தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல்துறையின் கீழ்செயல்படும் இந்தியாபோஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே, தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது FACE எப்ஏசிஇ ஆர்டி ஆப் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ்சான்றிதழ் (ஜீவன்பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து உள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்தவேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல்ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
கடந்த ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம், சென்னை மண்டலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்பித்து உள்ளார்கள். தமிழக அஞ்சல் வட்டத்தில் உள்ள 11800 அஞ்சலகங்களில் பணிபுரியும் 16000 க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மூலம் இந்த சேவையை பெறமுடியும்
2014 ஆம் ஆண்டில் அரசாங்கம் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (ஜீவன் பிரமாண்) அறிமுகப்படுத்தியது. அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மற்றும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தபால்காரர் மூலம் விழிப்புணர்வு வழங்க ஏற்பாடு செய்து உள்ளது.
மத்திய அரசின் தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய அஞ்சல்துறையின் சார்பில், இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 1, 2018 அன்று துவங்கப்பட்டு, இந்த குறுகிய காலத்தில், நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் உள்ள 136000 அஞ்சலகங்களுக்கு வங்கி சேவைகளை விரிவுபடுத்தி, 12 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கை துவங்கி உள்ளது.
இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது டாக் சேவா செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமன்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு குமரி மாவட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கேட்டு கொண்டு உள்ளார்.