
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் உழவர் பயிற்சி மையம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலக வாக்குச்சாவடி மையம், நாகர்கோவில்-புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறிப்பிட்ட சில குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடி மையங்களான கிருஷ்ணன்கோவில் உழவர் பயிற்சி மையம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலக வாக்குச்சாவடி மையம், நாகர்கோவில்-புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம் ஆகியவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வாக்காளர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்ல ஏதுவாக சாய்வுதள வசதிகள் முறையாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
அரசு அலுவலக வளாகங்களில் அமைந்து உள்ள மையங்களின் பாதுகாப்பு மற்றும் இடவசதி குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் நிலவும் சிறு குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்து, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் நமச்சிவாயம், உதவி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
