
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து 1800-599-8010 மற்றும் தேர்தல் உதவி எண் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுபாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.4.2026 அன்று நடைபெற உள்ளது. நடைபெற உள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகச் சான்றளிப்பு கண்காணிப்பு மையம் உள்ளிட்ட மையங்கள் நாஞ்சில் கூட்டரங்கில் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறை 24×7 அடிப்படையில் செயல்பட்டு, தேர்தல் நடத்தை விதிமீறல்கள், சிவிஜில் செயலி புகார்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது. மேலும் சிவிஜில் புகார் கண்காணிப்பு பிரிவில் சிவிஜில் செயலி மூலம் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு, பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஊடகக் கண்காணிப்பு பிரிவில் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகள், கட்டணச் செய்திகள் மற்றும் அனுமதியற்ற விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளபட்டது.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளான தொலைபேசி மூலம் வரும் புகார்களை பதிவேடுகளில் உடனடியாக பதிவு செய்து, உரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும், நடைபெற தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து 1800-599-8010 மற்றும் தேர்தல் உதவி எண் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
