
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து,
மாவட்ட அளவில் நடத்திய
இரண்டு சிறப்பு கல்விக்கடன் முகாம்களின் மூலம்
மொத்தம் 104 மாணாக்கர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில்
கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது-
காரைக்குடியில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில்,
கல்லூரி மாணாக்கர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை
மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன்னிலையில், மாணாக்கர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கி தெரிவிக்கையில்,
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் இரண்டு சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, கடந்த 5.9.2023 அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமின் மூலம் 39 மாணாக்கர்களுக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டு, அன்றைய தினம் சிவகங்கை முகாமில் கலந்து கொண்ட 37 மாணாக்கர்கள் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர்.
அதேபோன்று இன்றைய தினம் காரைக்குடியில் நடைபெற்றுள்ள சிறப்பு கல்வி கடன் முகாமின் மூலம் 65 மாணாக்கர்களுக்கு ரூ.6.59 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டு, மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட 34 மாணாக்கர்கள் ரூபாய் 1.73 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.
ஆகமொத்தம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து, மாவட்ட அளவில் இரண்டு சிறப்பு கல்விக்கடன் முகாம்களின் மூலம் மொத்தம் 104 மாணாக்கர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் இம்முகாம்களின் மூலம் முகாம்கள் நடைபெற்ற நாட்களில் விண்ணப்பித்துள்ள 71 மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் மீது கடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழிவகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே தற்போது பயன்பெற்றுள்ள மாணாக்கர்கள் தங்களை சார்ந்தோர்களிடம் எடுத்துரைத்து, பயன்பெற செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தங்களை போன்று கல்வி கடன் பெற்று சிறந்த முறையில் பயின்ற மாணாக்கர்கள் தற்போது தங்களது வாழ்வில் சிறந்து விளங்கியுள்ளனர். தங்களது குடும்ப சூழ்நிலையினையும் கருத்தில் கொண்டு சிறந்த முறையில் பயின்று நல்ல வேலைவாய்ப்பினை பெற வேண்டும்.
தங்களது ஆர்வத்தி்ன் அடிப்படையில் தங்களுக்கான துறையினை தேர்தெடுத்து, அதில் சிறந்து விளங்கிட வேண்டும். மேலும் தாங்கள் பெற்றுள்ள கல்வி கடனை சரிவர செலுத்தி, எதிர்கால மாணாக்கர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்திட வேண்டும்.
இதுபோன்ற வாய்ப்பினை மீண்டும் ஏற்படுத்தி தருவதற்கென மாபெரும் கல்வி கடன் முகாமினை இம்மாத இறுதிக்குள் நடத்திடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தினால் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனை மாணாக்கர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் சங்கரகிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் காரைக்குடி சுற்று வட்டாரத்தில் இயங்கும் 21 வங்கிகளின் மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணாக்கர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர்.